சிறுமொட்டும் பெருநெருப்பும்
பாரதி பிறந்த பூமியிலே - யாமும்
பிறந்திட்டோ மென்றோம் கர்வத்திலே! - அதை
பாதகர் காமுகர் காமத்திலே கூடி
பாருக்கு முன்னே உடைத்தனரே!
நேற்றுதான் பெய்த மழையினிலே - இங்கு
அரும்பிய மொட்டுகள் செடியினிலே! - ஐயோ
பூத்து மணங்கூட பரப்பவில்லை - வண்டு
மொட்டினைக் குடைந்து கசக்கிடுதே!
பால்மணம் வீசும் பவளக்கொடி மேலே
காமத்துப் பாலினைத் தேடுதம்மா! - ஐயோ
மொட்டிதழ் படிந்த பனித்துளியில் - பல
முதலைகள் குளித்திடத் துடிக்குதம்மா!
பிஞ்சவள் முகங்கண்ட ஐந்தறிவு நாயும்
கொஞ்சிடும்! ஆபத்தில் குரைத்திடுமே! - இந்த
ஆறறிவு மனித மிருகங்கள் செயல்
வேலியே பயிரை மேய்ந்தகதை!
புனிதமே கெட்டுப் போய்விடும் என்றே
அடைத்திட்டார் பெண்ணுக்கு ஆலயத்தை! - இங்கு
கருப்பை வளரா பனிப்பூவிதழ் - ஐயோ
பொசுங்கிய தீட்டுக்கு யார்பொறுப்பு?
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment