Thursday, December 14, 2017

ஏய் பெண்ணே!

ஏய் பெண்ணே!
ஏய் பெண்ணே!
உச்சந்தலையில் என்ன சண்டை?
உச்சிவகிடு எடுத்து
ரெண்டாய் பிரித்தாய்
கூந்தலை!

ரெட்டைச்சடை
ஒற்றைச்சடை ஆகியுள்ளது!
சமாதான பேச்சுவார்த்தை
தொடங்கியதோ?
வரவேற்கிறேன்!

சமாதானத்தின் நுழைவு வாயில்
ராக்கடிதான் போல!
கூந்தலை இணைத்து
பிடித்த பிடியை
விடவில்லை!
விடவே இல்லை!

சமாதானம் விரும்பாத
சில முடிகள்,
நெற்றியிலும்
காதோரத்திலும்
வீராப்பாய் படர்ந்துள்ளன!
முத்தமிட வரும்நேரம்
மூச்சுக்காற்றில்
ஆயுதம் ஏந்திட,
ப்பூவென ஒதுங்கிவிடும்
சின்னஞ்சிறு முடிகள்!

ஒருமுள் குத்த
வலிக்கும்!
இருமுள் குத்த
இன்னும் வலிக்கும்!
இது நியதி!
பெண்ணே! - உன்
இருவிழிப்பார்வை தாக்க
இதயம் தப்பித்தது;
ஒருகண் மூடி
மறுகண் திறந்தாய்!
கண்ணடித்தாய்!
இதயம் நொறுங்கிப்போனது!

என்னைப்பார்க்கும் போது
புருவத்தை உயர்த்தி பார்ப்பது
பட்டாம்பூச்சி அசைவதற்கு
உதாரணம் சொல்கிறது!

நெற்றிக்கு நேற்றிக்கடன்
செலுத்த தவறவில்லை!
குங்குமும் விபூதியும்
தினமும் நெற்றியில்
விழுந்து வணங்குகின்றன!

நடுவில் ஒரு பொட்டு
நட்சத்திர வடிவம்!
முகமதி முழுமதி!
நட்சத்திரகிரகணம்!

நெற்றியின் வெற்றிடம்
என் முத்தங்களின்
விளைநிலம்!

கன்னங்கள்
என் உதடுகள்
உலாவரும் ரதவீதி!
கண்களை மூடியே
உலாப்போகும்!

மூக்கு
என் மூக்கின் காதலி!
உரசிக்கொள்ளும் அளவிற்கு!

காதுகளில்
கம்மல் அழகாய் இருக்கிறதா?
கண்ணாடி முன்னாடி
நீ நிற்க
கண்ணாடி உன்னை
அங்கங்கே பார்ப்பது
தெரியவில்லையா?

கம்மல் உனக்கழகா என்று
எத்தனை முறை சோதனை போடுவாய்?
உன் காதில் சேர்ந்த பின்
அழகானது தெரியாமலே!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...