Wednesday, November 29, 2017

கருவாச்சியுடன் காலை

கருவாச்சியுடன் காலை

கண்களை கசக்கியே முழித்து
கருவாச்சி முகத்தைத் தேடி
கைபேசி தொடுதிரை தடவ
கன்னத்தைத் தடவும் உணர்வு!

"என்னைச் சூடாமல் திரிகிறாள்!
கருவாச்சிக்கே இந்தத்திமிர் என்றால்
வெள்ளச்சிக்கு எம்புட்டு இருக்கும்?"
என்கிறது என்தோட்ட மல்லி!

மணம்புரியும் வரை காத்திருந்து
மணநாள் முழுதும் 
மணந்தாயே மல்லி!
கூந்தல் அலங்காரம் என்றேகூவி
கூந்தல் வாசம் நுகர்ந்தாய்!
போதாதோ?

கருவாச்சி கண் முழிக்க
கட்டியே
கன்னத்தில் முத்தம்போட்டு
தேநீர் அருந்தி மீதம் வைக்க
அதெடுத்து
அத்துளி பருகினேன்!

குளியலறை கூட்டிச்செல்ல
குழாய்த்தண்ணீர்
வாளியில் தாவிக்குதிக்கிறது!
அவள் மேனி
தொடப்போகும் ஆனந்தத்தமோ?
சலசலவென கூச்சலிட்டு
எச்சில்போல நுரை வடிக்கிறது!

அமர்த்தி
அவள்முகம் மஞ்சள்தடவி
குளிப்பாட்ட
கன்னத்தை விட்டுப்போக
கை மறுக்கிறது!
மஞ்சள் பூசும் சாக்கில்
மேனியெல்லாம் தொட்டுத்தொட்டு 
நான் உருக
நீர் உருகி
அவள் காலடியில் ஓடுகிறது!

துண்டெடுத்து தலை துவட்ட
இதுபோதும்;
இப்படியே சாவேனென்று
கொடியில் விழுந்து
தற்கொலைக்கு துண்டு முயல
மறுநாள் துவட்டும் வரம் வாங்கி
உயர்த்தெழுந்தது!

மடியமர்த்தி 
சீப்பெடுத்து தலைவாரி
சடைபோட்டு சாலம்செய்து
காதோரம் கடித்து
கம்மலையும் மாட்டி
உச்சந்தலை மீது
உதடு பதித்தேன்!

புருவத்தில் மைவைத்து வசியம்செய்து
நெற்றியில் நச்சென்று இச்சுவைத்து
கீழேபார்க்க உதட்டில் செல்லக்கோபம்!
மீண்டும் ஒரு முத்தம்
சமாதானம்!

அழகாய் ஒரு சுடிதார் போட்டு
சுற்று வந்து நான் ரசிக்க
வெட்கத்தில் அவள் பூத்த புன்னகை
அதில்மயங்கி அணைத்தது காதல்!

நெஞ்சில் சாய்த்து தோசை ஊட்ட
முன்பல் விரல்கடித்து சேட்டை!
ஆவென்று விரலெடுக்க
வாயில்போட்டு
வலிதந்தவளே
வலிக்கு மருந்திடுகிறாள்!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...