Tuesday, September 11, 2018

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்



நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே!
நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே!
நாற்றுநட தாயவளும் போகையிலே
நானும்போக அழுததெல்லாம் கண்ணுக்குள்ளே!
சேற்றுக்குள்ளே நானிறங்கிப் போகையிலே
தவளையிடம் தாவக்கற்றேன் விரைவினிலே!





கிணற்றருகே எட்டிச்சென்று பார்க்கையிலே
என்முதுகு புண்ணானது தாயினாலே!

சாலையிலே நான்நடந்து போகையிலே 
இருபுறமும் குடைபிடிக்கும் மரங்கள்தானே!
இன்றெல்லாம் பறவையெல்லாம் புத்தகத்தில்!
நான்பார்த்தேன் நேரினிலே கானகத்தில்!
நீச்சலுக்குப் பயிற்சிப்பள்ளி போனதில்லை!
நீந்தக்கற்றேன் மாமாவால் கண்மாயிலே!
தவில்காரர் வாசிக்க அருகேசென்று
அதுவெனக்கு வேண்டுமென்று அழுதேன்நானே!


என்முத்தம் வாங்கினார்கள் நிறையபெண்கள்!
இன்றதனைத் திரும்பக்கேட்டால் என்னவாகும்?
உறவுகளும் நட்புகளும் கூடிவாழ்ந்த
அந்தக்கால நினைவுகளும் சுகமே!சுகமே!


- சரவணபெருமாள்

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!


கண்ணுக்குத் தெரியாத
தென்றலின் சேட்டையால்
கண்ணில் தெரிந்த
தென்றல் கூந்தல்!
ஒற்றைக் கோட்டில்
ஆடவன் தடுமாறினால்
ஒய்யாரமாய் நெளியும்
புருவத்தின் சேட்டையாம்!


சிலையென நின்று
நிலையினை மறந்தால்
ஏழாம் அறிவு
விழிகளின் மந்திரம்!
தங்கச் சில்லறையின்
சிதறல் ஒலி
தவிடு பொடியானால்
உனது சிரிப்பொலி!


உன் புன்னகை
சிந்தும் வழியில்
வரிசையாய் நிற்கிறது
வாலிபர் கூட்டம்
ஏறெடுத்துப் பாராத
எட்டாக்கனி முகம்
எனையேனோ பார்த்து
எடுத்துக்கொள் என்றது


நிலவின் விடுமுறையில்
நிறைந்த ஒளிப்பேழை
நிலத்தில் விழுந்தாற்போல்
இதயத்தில் நீ!
உலகைச் சுருட்டி
ஒட்டுமொத்த மகிழ்வும்
உன்னால் வந்தது!
எனக்கு என்னானது?


மனம்போன ஒத்தையடியில்
கைகோர்க்க வந்தவளே!
இனியென்ன தயக்கம்?
பெற்றோரின் விருப்பம்!
வரவெனில் கல்யாணப்
பந்தலில் காத்திருப்பேன்!
பிரிவெனில் கல்லறை
வாசலில் காத்திருப்பேன்!


- சரவணபெருமாள்

என் விழியில் உன் பார்வை

என் விழியில் உன் பார்வை




மயக்குவாள் இன்றி திரிந்த விழிக்கு
உடைவாள் ஆனது உன் விழியே!
என்னைப் பார்த்ததோ?
இல்லை எதார்த்தமோ?
மண்ணைக் கவ்வியது என் விழிகள்!


தானியங்கு சேமிப்பகமாய்
என் மூளையில்
தவறுதலாய்ப் பதிவான காட்சி
உன் பார்வை!
தொலைக்காட்சியின்
முக்கியச்செய்தி போல்
தொடர்ந்து
என் நினைவில் ஒளிபரப்பாகிறது!


மறுபடி அந்தக் காட்சிக்காய் ஏங்குவேன்!
அதுபுரியும் ஆட்சியில் தான் வாழுவேன்!
வறட்சியில் குளத்தினில்
பாய்ந்திட்ட மழைவெள்ளமே!
மிரட்சியில் உடைந்திட்ட கரை
என் உள்ளமே!
இலக்கற்ற தென்றலாய்
பாய்ந்தேன் நானடி!
இலக்கினி நீயடி!
படர்வேன் கண்மணி!
உரசலாய் கொஞ்சம்!
மெர்சலாய் கொஞ்சம்!
சிரிசினில் ஊதி;
மூச்சினில் பாதி!
நான் இருப்பேன்!


விழிசெய்யும் நிகழ்ச்சியே
காதலின் புரட்சியே!
விரைந்துனை அடைவதே
இதயத்தின் குளிர்ச்சியே!
இதற்குமேல் எதற்கு,
உதாரணம் நமக்கு?
இணைந்தினி வாழ்வோம்;
இதயமே வாயடி!


- சரவணபெருமாள்

தாவணிக்காலக் கனவுகள்

தாவணிக்காலக் கனவுகள்



வெட்கத்த பூட்டத்தான் வழியேதும் இருக்கா?
வந்து சொல்லடி சிநேகியே
அந்தக்காலக் கதை சொல்லி அறுக்குற
கெழவியக் கூட்டிட்டுப் போ வெளியே


ஓலை அனுப்புன அடுத்த வண்டியில
மாமன் வந்துட்டான் குச்சுக்கட்ட - என்
மாமன் வயசுக்கு வந்ததேதி கேளு
நான் போறேன் அவனுக்கு குச்சுக்கட்ட


மூஞ்சிய மூடுன தாவணிக் குள்ளேயும்
நூலிடுக்குல குட்டிச்சன்னல் - அந்த
சன்னல என்கண்ணு தாவிக்குதிக்குது - அது
மாமன்மேல நான் வச்சகாதல்


தாவணி மிச்சமா விட்ட இடுப்புல
சந்தைக்கு வந்த மாமங்கையி
கண்ணுல கையில காமம் ஏதுமில்ல
அதனால தப்பிச்சான் பொடிப்பையன்


தாவணி எப்பத்தான் சேலையா மாறும்
காத்துக் கெடக்கேன் என்மாமனுக்கு
தாலியக் கட்டுன அப்புறம் நான்புருசன்
பொஞ்சாதி எனக்கு மாமங்காரன்


- சரவணபெருமாள்

காதலாகிய கவிதை!

காதலாகிய கவிதை!
 
வந்தோம்; உண்டோம்!
எனும் வண்டினம்,
இதோ!
பூவனம் சுற்றி
பூவெழில் கிறங்கி
மதுகொண்ட மலர்முன்னே
மதுவுண்ணாது மயங்கிடுதே!
பாடத்திலக்கியம் பயின்ற
இளவல்கள்
பட்டம்பெற்ற பின்னரே,
இதோ!
உண்மையான இலக்கியத்தேடல்!


தற்கொலை வேண்டாமென
தாவிப்பிடிக்கிறது,
பனித்துளியைப் புல்நுனி!


கண்ணில் மண்தூவாது
களவாடும் கதிரிடம்
கத்தியின்றி ரத்தமின்றி
நீர்மீட்ட குளிர்காற்று!


பூச்சிகளின்
கால்களில் ஒட்டிச்சென்று
களவுமணம் புரியும்
மகரந்தங்கள்,
மணம்வீசும் மலர்களாய்!


சுற்றலென்பாரைப் பொய்யாக்கி
நிலையாய் பூமியும்
விழுந்தெழும் வெய்யோனும்
மந்திரவாதிகள்!


கயிறின்றி
கடலைக் கட்டியிழுக்கும் காற்று,
ஏதுமறியாததாய்
உடல்நுழைகிறது அப்பாவியாய்!


அடடா!
இன்னும் எத்தனை காட்சிகள்?
இந்தக் கவிதைகளில்!


இதக்காற்றின் இச்சையில்
இதழ்விரித்த மயில்தோகையென
கவியிச்சையில்
விரிகிறதே இமைத்தோகை!


காதலியிருப்பவனுக்கு
ஒற்றைக்காதலி!
காட்சிகளை ரசிக்கப்பழகியதால்,
ஒவ்வொரு கவிநூலும்
என்காதலி!
கவிதையில் காதலாகிப்போன
காதல் மன்னன் நான்!


- சரவணபெருமாள்

வெந்தணல் வீசும் காற்று!

வெந்தணல் வீசும் காற்று!


குற்றங்கள் ஏதும் செய்யவில்லை! - நாங்கள்
பெண்ணாய்ப் பிறந்ததே குற்றமம்மா! - எங்கள்
பால்முகத்தைக் கண்டோர் காலமெங்கே? - இன்று
பாலுறுப்பை நோக்கும் அவலமம்மா!


எவ்வுறுப்பு எதற்கு யாமறியோம்! - அதில்
நெருப்புக் குழம்பை ஊற்றுகிறார்! - நேற்றுதான்
பால்குடி பருவங் கடந்தோம் - தாயே!
காமத்துப் பால்தேடிக் கடத்துகிறார்!


வகுப்பறை சென்றே யாமமர்ந்தோம்! - அதை
பள்ளியறை ஆக்கும் ஆசிரியர்! - தாயே!
அப்பனே ஆசையில் அணைக்கும் காலமிது!
ஆசிரியன் மட்டும் விதிவிலக்கா?


பெண்ணுக்குப் பெண்ணே காவலென்றார்! - பொய்யே!
பேராசிரியையே தூது வந்தார் - ஐயோ!
இந்தக்கொடுமை பெண்ணிற்கு மட்டுமா? - இங்கு
மாணவனைக் கட்டும் ஆசிரியை!


எம்மேலே மட்டுந்தான் வெந்தணலா? - இல்லை!
எம்தந்தை மேலும் வெந்தணலே! - ஆமாம்!
விவசாயம் செய்யும் யாவருக்கும் - அந்த
அரசாங்கம் மூட்டும் வெந்தணலே!


- சரவணபெருமாள்

தமிழ்ப் போர்வையில் திரியும் பிரிவினைவாதிகள்!

தமிழ்ப் போர்வையில் திரியும் பிரிவினைவாதிகள்!


           பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உதயமானது என்று சொல்லப்பட்டாலும் கூட, அதனையும் உறுதியாய் சொல்ல முடியாத அளவிற்கு தொன்மையும் வன்மையும் மிகுந்தது, நம் தாய்மொழியான தமிழ்ச்செம்மொழி. ‘அறிவியல் உலகம்’ என்று இன்றைய உலகைச் சொன்னால் கூட, அது மூடத்தனம் என்றே குட்டு வைத்து விடுகின்றன, நம் முன்னோரின் விஞ்ஞானம் புகுந்துள்ள தமிழ் நூல்களும் தமிழரின் பழங்கால கட்டிடங்களும் ஆலயங்களும். அத்தகையதோர் தமிழ் மொழியை, நம் செம்மொழியை இன்று புல்லுருவிகள் போல, தமிழ் தமிழ் என்று பொய்க் கூப்பாடு போடும் சில அரசியல் கட்சிகளும், நேற்றைய மழையில் முளைத்த இன்றைய சில காளான்களும் தம் வயிற்றை நிரப்ப, தமிழின் அடையாளங்களைச் சிதைக்கும் வண்ணம் செயல்படுகின்றன. அதனைக் கண்டிக்கும் வகையிலும், உண்மையை உரைப்பதற்காகவுமே இந்தக் கட்டுரை.

           தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டுமாம்! ஆமாம்! இதில் யாருக்குத்தான் மாற்றுக் கருத்து இருக்கப் போகிறது, இந்தத் தமிழ்நாட்டில்? ஆனால், அந்தத் தமிழர் யார்? என்ற ஒரு கேள்வி வருவதற்கான சூழ்நிலையினை தாங்களே உருவாக்கி, அதற்குத் தாங்களாகவே ஒரு விளக்கம் தருகின்றனர். தாம் தான் கடவுள் போலவும், தமிழர் உருவான போதே பிறந்து விட்ட மூதாதையர் போலவும், கையில் ஒரு சாதிப் பட்டியலைத் தாமாகத் தயாரித்து, இந்த சாதியினர் தமிழர், இந்த சாதியினர் தெலுங்கர், இவர் கன்னடர், இவர் மலையாளி என்றே பறை சாற்றி, தம் வயிற்றைக் கழுவ தண்ணீர் தேடித் திரிகின்றனர், இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள்.

           சாதியினை அடிப்படையாகக் கொண்டு, தம்மைத் தமிழர் என்றே, தாம் தான் கூவும் குயிலென்றே நினைத்துக் கொண்டு கரையும் காக்கைகளுக்கு, ‘சாதி’ என்ற வார்த்தையே தமிழ் இல்லை என்ற சேதி தெரியாமல் போய்விட்டதே! பாவம்! இதில் ஒரு நபர், இளைஞர். அவர் பெயர் பாரி சாலன். ஒரு ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழர் யார்? என்பதனை அறிய நிச்சயமாய் சாதி என்ற ஒன்று இருக்க வேண்டுமாம். ஒருவர் எந்த சாதி என்பதனை வைத்துத் தான் வைத்துத் தான் அவர் தமிழரா? என்பதனையே முடிவு செய்ய முடியுமாம்! எப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு இளைஞன் அவன்! இளைஞர்களின் முற்போக்கான சிந்தனைகளின் மத்தியில், ஒரு அவமானச் சின்னம் என்றே எனக்குத் தோன்றுகிறது!

           தமிழ்நாட்டில் வசிக்கும், தெலுங்கர்கள் ஆந்திராவில் இருந்தும், கன்னடர்கள் கர்நாடகாவிலிருந்தும் இது போலே இன்னமும் சில வரலாறுகளை அவராய் உருவாக்கி, மிகைப் படுத்திப் பேட்டியளித்திருந்தார், அந்த மூடர். 1956-ல் இருந்து தான், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா. ஏன் இந்தியா முழுமைக்கும் 1956-ல் தான் மாநிலங்களே பிரிக்கப் பட்டன. அதற்கு முன் திராவிட நாடு, நம் நாடு என்ற தெரியாமல் போனது இந்த முட்டாள்களுக்கு! அத்தனை ஆதி கால வரலாறு பேசும் அவர்களுக்கு, இவ்வரலாறு தெரியாமல் போய் விட்டதா என்ன?

           தமிழர், திராவிடர் என்ற இரு சொற்களும் தமிழரையே குறிக்கும் என்று அன்றே கூறிச் சென்றுள்ளார், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று குரல் கொடுத்த அறிஞர் திரு. இராபர்ட் கால்டுவெல் அவர்கள். மேலும், ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெறுவதற்கு அம்மொழி, தன் கிளைமொழிகளுக்குத் தாயாக விளங்க வேண்டும். இந்த விதி தமிழ்மொழிக்கு கச்சிதமாய் பொருந்தி உள்ளதாக, நமது மூதாதைக் கவிஞர்களும் மொழியியல் வல்லுநர்களும் தெரிவித்து உள்ளனர். அதாவது, தமிழ் மூலமொழி அல்லது தாய்மொழி எனவும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தமிழின் வழிமொழிகள் அல்லது கிளை மொழிகள் எனவும் விளக்கப் பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு தமிழ், உயர்தனிச் செம்மொழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது உண்மை தானே!

           ஆக, அங்ஙனம் நோக்கின், இன்றைய தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ், சில இடங்களுக்கு ஏற்ப சிறு மாறுதல்களோடு நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் என்ற வழங்கப் பெறுவது போலத்தான், பழைய திராவிட நாட்டில் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் இருந்திருக்கும். ஓய்வற்ற காலச்சக்கரத்தின் சுழற்சியினால், பெரும் மாற்றங்கள் கண்டு இன்று அவை பெரும் வித்தியாசப் பட்டிருக்கலாம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்தான், இங்கு அவற்றிற்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லாதது போலான மாயையகள் உருவாகியுள்ளன; அல்லது உருவாக்கப் பட்டுள்ளன. ஆக, அவ்வாறு சிந்திக்கையில், நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ் போலவே அவையும் தெலுங்குத் தமிழ், மலையாளத் தமிழ், கன்னடத் தமிழ் என்றே அன்று இருந்திருக்க முடியும். இது குறையா? இது தமிழின் தொன்மைக்குப் பெருமை!

           மேலும், பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர் போன்ற மொழிப்போர் வல்லவர்களும், தமிழ்ச்செம்மொழித் தன்மைக்கு மேற்கண்ட தாய்மொழி, கிளைமொழி என்ற விதியினை ஆராய்ந்து உரைத்த கூற்றுகளையும் நாம் உற்று நோக்க வேண்டும்.

           இத்தகைய மாபெரும் சரித்திரங்களைச் சுமந்த, வரலாற்றுச் சாதனைமிக்கத் தமிழ்ச் செம்மொழியை, தம் சுய லாபத்திற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, முட்டாள் தனமான கருத்துகளைத் தெரிவித்து, செம்மொழித் தகுதியினை அவமானப் படுத்தும் செயலைச் செய்வதுடன், அடுத்த தலைமுறைக்கும் தவறான தகவல்களைக் கொண்டுசேர்த்து, அதனோடு நில்லாது, சாதிச் சாயலும் பூசி, ஒன்றாய், நண்பர்களாய், உறவினர்களாய் வசிக்கும் திராவிடர்களுக்குள்ளே, தமிழருக்குள்ளே அடங்கியுள்ள இவர்களைப் பற்றிய உண்மைகளைத் திரித்து, பகைமையை வளர்த்து, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் சிந்தும் குருதியில் குளித்திட முனைகின்றனர்.

           மேலும், பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாக, அந்த பாரி சாலன் என்ற வடிகட்டிய முட்டாள், தமிழர் என்ற போர்வையில், நம் பாரத விடுதலைப் போராட்ட வீரரான, மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனைக் கூட தவறாய் சித்தரித்து, மொழி வேற்றுமையைத் தாண்டி, கொச்சைப் படுத்தி ஒரு பேட்டியளித்துள்ளார்(ன்). வேறு எந்தெந்த பேட்டிகளில் அல்லது மேடைகளில் எத்தனை தியாகிகளையும் வீரர்களையும் அவமானப் படுத்திப் பேசியிருப்பானோ? தெரியவில்லை!

           உணர்ச்சி பொங்கப் பேசும், திரு.சீமானுடைய பேச்சுக்களைக் கேட்க கடைவரிசை இடமாவது கிடைக்குமா என்பது போல் ஆவல் கொண்டிருந்த என்னை, அவருடைய இதே கொள்கையும், அரசியல் சுயலாபிகளாய்ப் போய் விட்டதனைப் போன்ற காரணத்தினாலும், மொழி வேற்றுமை புகுத்தும் காரணத்தினாலும், அதனையும் தாண்டி பகைமை வளர்க்கும் தொனியில் இருப்பதானால், அதுவும் உண்மையினைத் திரித்துச் செயல்படுவதனால், அவரை வெறுத்த என் போன்ற தமிழ்க் கவிஞர்களும், இளைஞர்களும் ஏராளம்.

           அடேய்! முட்டாள் மூடர்களே! என் தமிழ்த்தாயினையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் இவ்வாறு தவறாய் அரங்கேற்றுவதற்கும், தம் தாய் தந்தையையே தவறாய் அரங்கேற்றுவதற்கும் வித்தியாசமே இல்லையடா!. திருந்துங்களேனடா! நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதனை உணருங்களேனடா!


- கவிஞர் சரவணபெருமாள்

முகவரி தேடும் முழுமதி!

முகவரி தேடும் முழுமதி!
 

அடக் கடவுளே!
ஆண்களுக்கு
பாதுகாப்பே இல்லையா?
முன்னே சென்றாலும்
பின்னே சென்றாலும்
பின் தொடர்கிறது;
முழுமதி! - என்
முகவரி தேடி!


கண்ணடிக்கும்
வெண்ணிற மான்கள்
வானத்து மீன்கள்!
அவற்றை விடுத்து
கருப்பு நிலாவைக்
காதலிக்கிறதே,
வெண்ணிற நிலா!


காதலைச் சொல்ல
காலம் பார்த்தேன்!
அந்நேரம்
ஆலையின் நச்சால்
அசுத்தமாய் மரங்கள்!
நஞ்சேறி நரன்கள்!


மரமும் மாள
ஓசோன் சிதைய
ஓட்டையில் புகுந்த புகை
வெள்ளழகியை
புற்றாக்கலாம்!


சிந்திக்கும் போதே
சிறைபிடித்தது எம்மையும்
புற்றுநோய்!
விழித்தோம்!
வினந்தோம்!
ஆயுதம் இல்லை!
அடிகளும் இல்லை!

அந்தோ! எம்மை
ஆட்கொண்டது
கூரிய குண்டு!


சிவந்த வானமே!
பார்!
சிவந்தது மண்!
என் உதிரத்தால்!
என் முழுமதியிடம் சொல்!
அவள் புகுந்த நெஞ்சில்
புகுந்தது எச்சில்!


பணம் கேளோம்!
பதவி கேளோம்!
பாதிப்பின் நிவாரணம் கூட கேளோம்!
பதித்தனர் எம்மில்
பயங்கரக் குண்டுகளை!


முழுமதியே!
என் முகவரி தேடாதே!
உன்னையும் உடைக்கும்
பணம் விளைந்த பூமி இது!
நீயேனும்
நிம்மதி கொள்!


- சரவணபெருமாள்

அவளும் நானும்!

அவளும் நானும்!


அவளும் நானும்,
வானும் மண்ணும்!
அவள் வான்!
நான் மண்!
வானம் சிந்தும் மழைத் துளிக்காய்
அவள் சிந்தும் காதல் துளிக்காய்
காத்துக் கிடக்கும்
வானம் பார்த்த வயல்வெளி நான்!


அவளும் நானும்,
நிலவும் இரவும்!
அவள் நிலவு!
நான் இரவு!
நிலவு ஏற்றி வைக்கும்
நிலவொளிக்காய்
அவள் ஏற்றி வைக்கும்
என் வீட்டு விளக்குக்காய்
காத்துக் கிடக்கும்
தினந்தோறும் வந்து நிற்கும்
இரவு நான்!


அவளும் நானும்
கடலலையும் காலடியும்!
அவள் கடலலை!
நான் காலடி!
காலடி தொட்டிடும்
கடலலையின் தழுவலுக்காய்
அவள் விழியலை
என் விழி மோதிடும் ஆவலுக்காய்
காத்துக் கிடக்கும்
இதயத்தின் காலடி ஓசை நான்!


அவளும் நானும்
பூவும் காற்றும்!
அவள் பூ!
நான் காற்று!
பூ மணம் நுகர
பூவுக்குள் நுழைவதற்காய்
அவள் கரம் பற்ற
அவள் மனம் நுழைவதற்காய்
காத்துக் கிடக்கும்
என்னுடைய மூச்சுக் காற்று நான்!


அவளும் நானும்
முகிலும் மலையும்!
அவள் முகில்!
நான் மலை!
முகிலால் குளிர
முகிலின் மழைக்காய்
அவள் பார்வை முகிலின் குளிச்சிக்காய்
காத்துக் கிடக்கும்
மலைக் குன்றுகளின்
தலை உச்சி நான்!


அவளும் நானும்!
நானும் அவளும்!
அவள் நான்!
நான் அவள்!
ஆழமான மனதில்
நுழைந்திட்ட இம்சைக்காய்
மூடி வைத்த இதயக்கதவை
உடைத்தெறிந்த காதலுக்காய்
காத்துக் கிடக்கும்
நானும் அவளும்!


அவளும் நானும்
அமுதும் தேனும்!


- சரவணபெருமாள்

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்(16 வார்த்தைகள் மட்டும்)

 

அறுத்தாள்;
தொப்புள் கொடிதான்!
முறைத்தாள்;
சாப்பிடச் சொல்லித்தான்!
கடித்தாள்;
விரல்நுனி நகம்தான்!
எறிந்தாள்;
கைகளாலுன் கழிவுகள்தான்!
தவறுகளுக்குத் தண்டனை,
முதியோர் இல்லம்!


- சரவணபெருமாள்

உயிரில் கலந்த உறவே!

உயிரில் கலந்த உறவே!
 

உயிர்க்கும் முன்பே எனையே
உயிர்மெய் சுமந்த தாயே!
உயிரை யொழிக்குந் தொழிலே
உடனே முடக்கச் சொலலே!


உரிமை யெமக்கும் உளதே!
உயரிய பணிவாய் சொலலே!
உண்மை யொளித்த உலகே!
உயிரைக் குடித்த குழலே!


உதிர்த்த நாய்கள் வெறியே
உதிரம் உதிர்க்குங் குறியே!
உன்னிட மருந்தித் தானே
உருத்தது பாலும் சிவப்பாய்!


என்னைத் துளைத்துத் தானே
என்கீழ் மண்ணும் சிவப்பாய்!
வெண்ணிற உப்பளம் நனைந்து
செந்நிறச் செம்மண் நிலமாய்!


வந்தோர் போனோர் சுடார்
வதைத்த அரக்கர் எமார்
உயிரில் கலந்த உறவே!
உயிரை எடுத்த ததுவே!


- சரவணபெருமாள்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!




என்னவளே! எனக்கானவளே!
ஏதோவொரு மூலையில்
எனக்காய் பிறந்தவளே! - நீ
எங்கே இருக்கிறாய்?


முகமும் பார்த்தது இல்லை!
முழியில் விழுந்ததும் இல்லை! - ஆயினும்
முழுமதியெனவே ஒளி வீசுகிறது,
அன்பே! திருமண ஞாபகம்!

எப்படி இருப்பாளோ? எவளாய் இருப்பாளோ?

மல்லிகா என்று பெயர் வைத்தாலும்
மங்கையவள் மணப்பது இல்லை!
மண் என்றே பெயர் வைத்தாலும்
மல்லியின் நறுமணம் மாறுவது இல்லை!
மல்லியின் மணமடி, என் மனம்!
உன்முகம் பாராமலே,
உன்மேல் ஆசை வைத்தேனடி,
என் வருங்கால ராஜகுமாரி!


எங்கிருக்கிறாய்?
என் அருகிலா? தொலைவிலா?
நீயாவது என்னைக் கண்டால்,
காதல் வந்தால், சொல்லி அனுப்பு! - இன்னொரு
கம்பன் உருவாகட்டும் நம் காதலால்!


- சரவணபெருமாள்

விவசாயி

விவசாயி



விதைத்தவர்
வானை அண்ணார்ந்து பார்க்கிறார்
வானுயர கட்டிடம்!


- சரவணபெருமாள்

கரையும் நொடிகள்

கரையும் நொடிகள்



திரைபோடத் திரியாது நேரக்குறி யோட்டம்!
நரையான நரனுக்கும் காத்திரா வோட்டம்!
கரைகின்ற நொடிக்கீடாய் திரைகடலும் நீயோடி
கரைதொடு வாழ்வில்! வழிவிடு விரையூர்தி!


- சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...