Monday, February 26, 2018

மரணித்தால் மறக்கலாம்

மரணித்தால் மறக்கலாம் 


நிலவோட்டில் நீ என்று
விழியுரைத்த பொய்களால்
மூட மறுத்த இமைகள்
தூக்கத்தின் விதிமுடிந்த கதைகள்
முடித்து வைக்கப்பட்டன

தலையணை சாய்ந்த தலைக்குள்
மங்கையின் மடியென்ற தலைக்கனம்
எழ மறுத்த விடியல்கள்
எழாமல் நடித்த காலைகள்
மாலைகள் சுமந்து கொண்டன

ஆரந்தொடுக்க
நான் பறித்த நட்சத்திரங்கள்
கனவுக்கன்னி கழுத்தில் இல்லை
என் காதல் அஞ்சலி
ஊர்வலத்தில் சிதறப்பட்டன

வலியச்செல்லா என்மனம்
வலிந்து வந்த பெண்மனம்
நலிந்தது மெலிந்தது
உயிரும் உடல்விட்டது
உளமும் களம்விட்டது

மாமன் என்ற சொல்
வேரை விட்டது
போறேன் என்ற சொல்
ஆணி அறுத்தது
கிளைவிட்ட சுமைகள்
ஆலம் தலை சாய்ந்தது

வரைந்த ஓவியம்
காதல் காவியமானது
கருகிப்போனது
கண்ணீரில் சாம்பல் கரைந்தது
பொட்டும் மாலையும்
என் காதல் ஓவியத்தில்

என் காதல்
கரை தட்டும் கப்பலாய் கூட
ஆகாமல்
காகிதக்கப்பல் ஆகிப்போனது
கரைதட்டியிருந்தால்
கவனிக்கப்பட்டிருக்கும்
 
தழைவிட்ட காதல்
தலையறுக்கப்பட்டது
மறந்திடு என்ற
சராசரி அறிவுரையுடன்
மறக்கலாம்;
மரணித்தால் மறக்கலாம்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...