Tuesday, June 27, 2017

என் மகள் தேவதை.....

என் மகள் தேவதை.....

பத்து மாதம் உன்னை சுமந்தது
என் மனைவி
அவளையும் சேர்த்து சுமந்தது
நான்


அவள் உடலில் சுமந்த பிரசவ வலியை
உள்ளத்தில் அனுபவித்த வேதனை
உன் அழுகைச் சத்தத்திலும்
என்னவள் புன்முறுவலிலும்
மறைந்து போனது


கத்தியிலும் பயமறியா ஆணின் மனம்
தன் மகளின் தடுப்பூசிக்கு முன்னால்
பதட்டமாகித்தான் போகிறது


பெண்குழந்தை
நிச்சயம் ஒரு தேவதை


ஏனடி இவ்வளவு சந்தோசம்
மேகத்தில் மறைந்திருந்த நிலா
எட்டிப் பார்த்த பிரமை
கதவின் மறைவில் "அப்பா" என்று
நீ எட்டிப்பார்த்த போது


என் கன்னத்தை தடவிப்பார்க்கிறேன்
உன் பிஞ்சுவிரல் நகத்தின் கீறல்
ஒரு சுகமான காயம்
கூடவே பிறந்த கோபம் கூட
நீ நெஞ்சில் ஏறி மிதித்தால் மட்டும்
சிரிப்பாய் மாறுவது ஒரு மாயம்


எச்சில் அருவெருப்பாய் இல்லாமல்
தேனாய் தெரிந்தது
உன் உதட்டில் வடிந்த போதுதான்
பத்து முறை தலைவாரியும்


நான் காணாத அழகு
உன் கையில் சிக்கி செய்த சேட்டையில்
கலைந்து போன என் தலைமுடிதான்


தலையணயில் தலை வைத்தால்
அதை இழுத்து
தன் மடியில் போட்டு தாலாட்டுகிறாள்
இரண்டு வயது பெரிய மனுசி 


கன்னத்தில் முத்தம் கேட்டால்,
"அப்பா இங்கு" என்று
இன்னொரு கன்னத்திலும்
"அப்புறம் இங்கு" என்று
நெற்றிப்பொட்டிலும்
நீ போடும் முத்தத்திற்கு
பித்தனாகிப்போன தகப்பன் நான்


தேவதை
நிச்சயம் நீ ஒரு தேவதை


                                                             Written By
                                                    சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...