Tuesday, May 8, 2018

மஞ்சக் கயிறு போதும் - கிராமியக்கவிதை

மஞ்சக் கயிறு போதும் - கிராமியக்கவிதை


அன்பாகவே வம்பிழுக்கும்
ஆசை மச்சானே! - ஒரு
பூஞ்சோலையே பூக்கூடையை
சுமப்பதைப் பாரு!

சுருட்டி மடித்து
கட்டிவைத்த காகிதப்பூவும் - என்
இடுப்பில் இறக்கி வைத்ததனால்
மணப்பதைப் பாரு!

உன்வீட்டுத் தெருவில்
பூவைவிற்று முடித்திட்டபோதும் - என்
காலில் வேர்கள் முளைத்ததுபோல்
நிற்பதைப் பாரு!

பெரியவீட்டு முதலாளியும்
பெண்கேட்ட போதும் - என்
மனசு இறங்கிப் போகலியே
காரணம் யாரு?

மனசுக்குள்ளே உன்னைக்கட்டி
வாழுறேன் நானும் - அங்கே
வேறு யாரும் நுழையப் பார்த்தால்
சாவேனே நானும்!

காடுவேணாம் கரையும்வேணாம்
நகை நட்டு வேணாம் - நீ
கட்டிக் கிறேன்னு ஒரு வார்த்தை
சொல்லிடு போதும்!

பெரிய வேலை வேணுமுன்னு
கேட்கலை நானும் - மாமா
காட்டு வேலை பார்த்து சோறு
பொங்குவேன் நானும்!

தங்கத்திலே தாலிகட்டி
போட்டிட வேணாம் - ஒரு
நூலை மஞ்சளின் நனைத்துப் போடு
போதுமே மாமா!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...