Saturday, January 6, 2018

கட்சி

கட்சி

எத்தனையோ கட்சியடா நாட்டுக்குள்ளே
         எத்தனெல்லாம் தலைவனடா கட்சிக்குள்ளே
நெல்லறுக்கப் போகிறவன் கோவணமே
          அதையும்விட கட்சிக்கொடி மிகநீளமே
கட்சிக்கெல்லாம் தலைமையகம் கோட்டைபோலே
         வாழுகிறார் இன்னும்பலர் வீதிமேலே

எத்தனையோ கழகங்களும் மாறிமாறி
         நாற்காலியைத் தேய்த்ததுவே ஏறிஏறி
கழகங்களில் கலகங்கள் நாறிநாறி
         மானங்கெட்டுப் போனதுவே கப்பலேறி
பிறந்தநாளைக் கொண்டாடும் ஊதாரி
         விவசாய இழப்பீட்டில் கஞ்சனாகி

உள்ளாட்சித் தேர்தலிலே விலகிநின்றார்
         சட்டமன்றத் தேர்தலிலே தழுவிக்கொண்டார்
அடுத்துவரும் தேர்தலிலே முட்டிக்கொள்வார்
         அடுத்தடுத்த தேர்தலிலே அணைத்துக்கொள்வார்
முன்தேர்தல் ஊழல்வாதி என்றுசொல்லி
         மறுதேர்தல் நண்பரென்று விருந்துகொள்வார்

ஏழையெல்லாம் உறுப்பினராம் பசிக்கட்சி
         ஏருழுது நெல்லறுத்தும் பசித்தகட்சி
ஆண்டதும் ஆள்வதும் பலகட்சி
         சாகாமல் வாழ்வது வறுமைக்கட்சி
கடன்சலுகை அறிவிப்பு தரும்கட்சி
         கடன்தந்து பங்கெடுத்துக் கொளும்கட்சி

தம்சாதி ஆதரவைப் பெறமுனைந்து
         ஏழைசாதி பசியாற்றும் பணிமறந்து
சாதிச்சாயம் பூசப்பட்டு சிலதலைவர்
         பெயர்சூட்டும் நாடகத்தில் கட்சித்தலைவர்
சாதியிலும் வீதியிலும் பலர்கட்சி
         துவங்கியதே சாதிவளர்ப்புப் பண்ணைக்கட்சி

சாதியிலே கட்சிபல துவக்கிக்கொண்டார்
         சாதிசொல்லித் தம்வயிறை நிரப்பிக்கொண்டார்
தமிழனென்று கட்சிசிலர் தொடங்கிக்கொண்டார்
         மொழிவடிவில் வேற்றுமையை வளர்த்தும்விட்டார்
தமிழ்த்தாயை விலைமாது போலாக்கும்
         கட்சிகளை கண்டறிந்து கழுத்தறுப்போம்

-  சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...